
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் பலத்த சோதனை மேற்கொண்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் அருகில் கணவன் மனைவி இருவரும் முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து 5-ம் பிரகாரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக ராஜகோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான்.
தினமும் சாப்பாடு வாங்கி வந்து இங்கு வந்து சாப்பிடுவது தான் வழக்கம். மேலும் நாங்கள் தினமும் இங்கு அமர்ந்து சாப்பிடுவது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு கையில் கொஞ்சம் அதிகமாக காசு இருந்தால் முட்டை குஸ்காவும் சிக்கன் கிரேவியும் வாங்கி வந்து சாப்பிட்டோம் என பதில் அளித்தனர்.
இதனை கேட்டு கோபம் அடைந்த போலீசார் கோவிலின் உள்ளே வந்து அசைவ உணவை சாப்பிட்டால் கோவிலின் புனிதம் கெட்டுப் போகும். இங்கு அசைவு உணவுகளை சாப்பிடலாமா? என திட்டியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்பு இருவரையும் திருவண்ணாமலை டவு ன் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் தம்பதியினர் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் தம்பதியினரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று காலை கோவில் வளாகத்தில் பரிகார பூஜை செய்யப்பட்டது.
தம்பதியினர் அசைவு உணவு சாப்பிட்டதால் கோவிலின் புனிதம் கெட்டுப் போனதாக உணர்ந்த கோவில் நிர்வாகிகள் கோவில் முழுவதும் புனித நீர் தெளித்து பரிகார பூஜை செய்துள்ளனர். கோவில் வளாகத்தினுள் அமர்ந்து தம்பதியினர் அசைவ உணவு சாப்பிட்டது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.