தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இப்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி (நாளை) விஜய் சந்திக்கிறார்.

இந்நிலையில் 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கவுள்ளார். சென்னை நீலாங்கரையிலுள்ள தனியார் அரங்கில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு அறுசுவை விருந்தானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பொது வெளியில் பேனர், கட் அவுட் வைக்கக்கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி விழாவில் கலந்துக்கொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.