குழந்தைகள் அடம்பிடிப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் கேட்கும் பொருளை உடனே வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களின் பழக்கம்தான். கடைகளுக்கு செல்லும்போது குழந்தைகள் ஒரு பொம்மை அல்லது பொருளை கேட்கிறார்கள். “இல்லை” என்று கூறினால், அவர்கள் அழுது அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அந்தப் பொருளை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இது குழந்தைகளின் மனதில், “அழுதால் கேட்டது கிடைக்கும்” என்ற எண்ணத்தை ஆழமாக பதிய வைக்கிறது. இதனால், அடுத்த முறையும் அவர்கள் இதே முறையைப் பின்பற்றுகிறார்கள்.

இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க, பெற்றோர்கள் உறுதியாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஒரு பொருளை கேட்கும்போது, வாங்க முடியாது என்று தெளிவாகக் கூறி, அவர்கள் அழுதாலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அவர்கள் அமைதியான பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், ஆனால் கண்டிப்பாக கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. தாத்தா, பாட்டி உள்ளிட்டவர்களும் பேரப்பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காமல், இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகள் அடம்பிடிப்பதால் நீங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை, மாறாக, நீங்கள் வாங்கிக் கொடுப்பதால்தான் அவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.