ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்களது மொபைல் போன் அல்லது லேப்டாப் சார்ஜ் செய்வதற்காக மட்டுமே மின்சார சாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டிலைப் (Electric Kettle) பயன்படுத்தி எதையோ சமைத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் தனியாக ஒரு எக்ஸ்டென்ஷன் போர்டையும் பயன்படுத்தியுள்ளார். ரயிலின் மின்சார அமைப்பு இவ்வளவு அதிக மின் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பதால், இது போன்ற செயல்கள் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு ரயில் தீப்பிடிக்க மிகப்பெரிய காரணமாக அமைந்துவிடும்.

​சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, பலரும் அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்து வருகின்றனர். இது குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கும் புகார்கள் சென்றன. உடனடியாகச் செயல்பட்ட ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட பெண்ணின் பி.என்.ஆர் (PNR) எண் மற்றும் பயண விவரங்களை அளிக்குமாறு கேட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் இது போன்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.