குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே கடந்த புதன்கிழமை இரவு இந்திய வான்படையின் ‘ஜாகுவார்’ (Jaguar) போர் விமானம் பயிற்சி பணிக்காக புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹரியானா மாநிலம் ரேவாடியில் இருந்து வந்த பைலட் சிதார்த் யாதவ் (வயது 28) தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மற்றொரு பைலட் மனோஜ் குமார் சிங் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து ஜாம்நகர் விமானப்படை நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட 9.30 மணியளவில் நிகழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதை மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து விலக்கி பாதுகாப்பான இடத்திற்கு செலுத்த பைலட்டுகள் முயற்சித்துள்ளனர். இதில் சிதார்த் விமானத்திலிருந்து வெளியே தாவ முடியாததால் உயிரிழந்தார் என வான்படை தெரிவித்துள்ளது. பைலட் சிதார்த் யாதவுக்கு, வருகிற நவம்பர் 2ஆம் தேதி திருமணம்  நடைபெற இருந்த நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இவர் தனது குடும்பத்தில் நான்காவது தலைமுறையாக இந்திய ராணுவத்தில் சேவை புரிந்து வந்தவர்.

 

இந்த விபத்து ஜாம்நகர் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள சுவரதா என்ற கிராமம் அருகே நடந்தது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் பலத்த தீப்பிடிப்பை ஏற்படுத்த, கிராம மக்கள் உடனடியாக விரைந்து வந்து பைலட் மனோஜ் குமாருக்கு உதவினர் பின்னர் போலீசாருக்கு தகவல் வழங்கினர். இந்திய வான்படை இந்த விபத்துக்கான காரணங்களை ஆராயும் வகையில் விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஹரியானாவின் அம்பாலாவிலும் இதேபோல் ஒரு ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.