உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசியே செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் ஹெச்பி வி எனப்படும் அந்த தடுப்பூசியை முதற்கட்டமாக தமிழகம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை கூறியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ஒன்பது வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.

சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இது குறித்த தகவல்களை கேட்டிருக்கின்றோம். மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பின்பு அதனை முறையாக குளிர்பதன முறையில் வைத்து பாதுகாத்து பயனாளிகளுக்கு  அவர்களது பள்ளிகள் அங்கன்வாடி மையங்களிலேயே இதை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். மேலும் கொரோனா தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.