பெண்களைக் கேலி செய்த வாலிபர்களுக்கு போலீசார் கொடுத்த இந்த ‘மேக்கப்’ தண்டனை இப்போது இணையத்தில் செம வைரல். மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இரண்டு வாலிபர்கள் பைக்கில் சுற்றிக்கொண்டு அங்கிருந்த பெண்களையும், பள்ளி மாணவிகளையும் ஆபாசமாகப் பேசி கிண்டல் செய்துள்ளனர்.

மாணவிகளைப் பார்த்து “எங்களையும் காதலிங்களேன்” என்றும் எல்லை மீறிப் பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி போலீசாரின் கவனத்திற்குச் சென்றது.

உடனடியாகக் களமிறங்கிய போலீசார், அந்த இரண்டு ‘ரோமியோ’க்களையும் தூக்கினர். அவர்களுக்குச் சாதாரணத் தண்டனை கொடுத்தால் போதாது என நினைத்த போலீசார், இருவருக்கும் தலையில் விதவிதமாக ஜடை போட்டு ‘மேக்கப்’ செய்து அழகு பார்த்தனர்.

அந்த கோலத்திலேயே அவர்களைப் பொதுமன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

போலீசாரின் இந்த அதிரடி மற்றும் கிண்டலான நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இது போன்ற பொதுவெளியில் அவமானப்படுத்தும் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.