மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு உத்தரவின் படி தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை அந்தியோதயா  ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த வருட முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாதம் 2000 டன் வருடத்திற்கு 24 ஆயிரம் டன் ஊட்டச்சத்து கலவை தயாரிக்கும் பணியில் நுகர்வோர் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அரிசியை தலசீமியா  எனப்படும் மரபணு சார்ந்த ரத்தசோகை போன்ற உடல்நல குறைபாடு இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது என்று விழிப்புணர்வு வாசகத்தை அரிசி சாக்குப்பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்வோர் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.