தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் நேற்று மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று ராகவா லாரன்ஸ்  தில்லையாடிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் விவசாயிகள் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் அதிகமாக வருகிறது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனவே அதை தடுக்கும் விதமாகத்தான் விவசாயிகளுக்கு உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளேன். தற்போது இங்கு வழங்கப்பட்டுள்ள டிராக்டரை இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். அதோடு நடிகர் விஜய் மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று விஜய் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கட்சி தொடங்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.