பரபரப்பான சந்தையில், கைகள் மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், கனரக சுமைகளைச் சுமந்து செல்லும் தொழிலாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த காட்சி, தேசிய தலைநகரில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்து கடும் கேள்விகள் எழுப்பியுள்ளது.

சமீபத்தில் பதிவான அந்த காட்சிகளில், தலையில் கனமான சாக்குப்பையைச் சுமந்து, அசைவுகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் தொழிலாளி சந்தை வழியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. அவரது மணிக்கட்டு மற்றும் கணுக்கால்களில் உலோகக் கட்டுகள் இருப்பது போல் தெளிவாகத் தெரிகிறது. வீடியோ எடுக்கப்பட்ட இடம் உறுதியாக அடையாளம் காணப்படாத நிலையில், காட்சியில் காணப்படும் வாகனங்கள் டெல்லி பதிவு எண் தகடுகளைக் கொண்டுள்ளன என்பதால், இந்த சம்பவம் டெல்லியின் நெரிசலான சந்தைகளில் எங்கோ நடைபெற்றிருக்கலாம் என பலர் நம்புகின்றனர்.

 

இந்த வீடியோ வெளிவந்ததுடன், சமூக ஊடகப் பயனர்கள் கோபத்தில் வெடித்து, டெல்லி காவல்துறை மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளை குறிவைத்து தலையீடு கோரியுள்ளனர். தொழிலாளியை ‘கொத்தடிமை போல’ நடத்துவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

ஒரு தொழிலாளர் உரிமை அமைப்பு சமூக ஊடகத்தில், “கைகள், கால்களில் கட்டுகள் போட்டு கொத்தடிமை போல வேலை செய்ய ஒருவரை கட்டாயப்படுத்தும் சம்பவம் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இது டெல்லியில் நடந்ததாக கூறப்படுகிறது” என்று பதிவிட்டு கவலை தெரிவித்தது.

வைரலான வீடியோவுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கை அதிகரித்து வருகின்றது. இருப்பினும், வீடியோவின் நம்பகத்தன்மை அல்லது சம்பவத்தின் உண்மை நிலை குறித்து டெல்லி காவல்துறை அல்லது தொழிலாளர் துறை இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.