மல்கான் சிங் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்தபோது மது போதையில் சர்ச்சை ஏற்படுத்தியதற்காக அலிகாரில் பணியாற்றிய தலைமைக் காவலர் சுனில் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வைரலாகிய வீடியோவில் அவர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மூச்சு பரிசோதனைக் கருவியைப் பறித்து அவசர சிகிச்சைப் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதாவது பணியில் இருந்தபோது மது அருந்தியதாக சந்தேகிக்கப்பட்ட சுனில் குமாரை, சக காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவரிடம் அவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

மூச்சுபரிசோதனைக்காக கொடுக்கப்பட்ட கருவியை எடுத்துக்கொண்டு, இது என் மூச்சை எடுக்கவில்லை. மெஷின் சேதமடைந்துள்ளது” என்று கூறி, சாதனத்தை மருத்துவரின் கையிலிருந்து பறித்தார் என்பதும் வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

புதிய கருவி வேண்டுமென வலியுறுத்திய அவர், பரிசோதனை கருவி “போலி” எனக் கூறி, ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தின் போது, மருத்துவரிடம் அசிங்கமான வார்த்தைகள் பேசி, அவரது எதிர்காலத்தை “கணிக்க முடியும்” என்று மிரட்டியதோடு, மருத்துவரின் உதட்டில் ஏற்பட்ட காயம் குறித்தும் கேள்வி எழுப்பினார் என கூறப்படுகிறது. நிலைமை மோசமடைந்ததால் மருத்துவர்கள் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அலிகார் எஸ்.எஸ்.பி நீரஜ் ஜாதவுன், வீடியோவில் பதிவாகிய நடத்தைக்காக தலைமைக் காவலர் சுனில் குமாரை உடனடியாக இடைநீக்கம் செய்தார். “பணியில் இருக்கும்போது மது அருந்துவது, தவறான நடத்தை காட்டுவது எவ்விதத்திலும் பொறுத்துக்கொள்ளப்படாது,” என்று எஸ்.எஸ்.பி தெரிவித்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டதாகவும், துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.