மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. இந்தியாவிற்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது.

மேலும் கடந்த 10 வருடங்களில் பாதுகாப்பை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளோம். இந்தியா உற்பத்தி நாடாக  உருமாறிக் கொண்டிருப்பதை உலக நாடுகள் பார்த்து வியந்து வருகிறது. அதிக ஆணவத்தில் தங்களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என நினைப்பவர்கள் மோடியை திட்டினால் தான் ஒரு வழி கிடைக்கும் என கருதி பொய்யான முட்டாள்தனமான அவதூறுகளை பேசி வருகின்றார்கள். அவர்களிடையே 22 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த தவறான எண்ணம் இருந்து வருகிறது. என் மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளால் பிறந்தது அல்ல. டிவியில் முகம் காட்டியதால் கிடைத்ததும் அல்ல. எனது நாட்டு மக்களுக்காக நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக எனது ஒவ்வொரு நொடியையும், என்னுடைய வாழ்வையும் அர்ப்பணித்திருக்கின்றேன் என பிரதமர் மோடி பேசி உள்ளார்.