வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசைப்படும் பலருக்கு, அங்குள்ள வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்கிற கேள்வி எப்போதும் உண்டு. இந்நிலையில், நெதர்லாந்தில் பணியாற்றி வரும் அனுஜ் சர்மா என்ற இந்திய இளைஞர், அந்த நாட்டின் வேலை கலாச்சாரம் மற்றும் நிதி சுதந்திரம் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

“இந்தியாவை விட நெதர்லாந்தில் சேமிப்பு பல மடங்கு அதிகம்” என்று கூறும் அனுஜ், வாடகை, மளிகை மற்றும் இதர செலவுகள் போகவும் கையில் கணிசமான தொகை சேமிப்பாகத் தங்குவது தனக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anuj Sharma | Life Abroad & Career (@anuj.abroad)

மேலும், அங்குள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்திற்கு (Work-Life Balance) கொடுக்கும் மரியாதை தன்னை வியக்க வைத்ததாகவும், மாலை நேரங்கள் முழுக்க முழுக்க நமக்கே சொந்தம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல், தனது கருத்துக்களுக்குக் கிடைக்கும் மதிப்பும், தெளிவான தொழில் வளர்ச்சியும் தன்னை மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராக மாற்றியுள்ளதாக அவர் அந்த வீடியோவில் விவரித்துள்ளார்.

ஆடம்பரமாகத் தெரிந்த பல விஷயங்களை இப்போது தாராளமாக அனுபவிக்க முடிவதாகவும், மன அழுத்தம் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை நெதர்லாந்தில் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளது பல இந்திய இளைஞர்களை அந்த நாட்டை நோக்கி யோசிக்க வைத்துள்ளது.