மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை, மைனர் சிறுவன் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த சிறுவன், மாணவியை தன்னுடன் வைத்துக்கொண்டு, யாரும் அருகில் வரக்கூடாது என கத்தியை காட்டி பயமுறுத்துகிறார். இது உண்மையிலேயே ஒரு திரைப்படக் காட்சி போல் இருந்தாலும், அது நடப்பது உண்மை  என்பதாலேயே மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீடியோவில், பின்னால் இருந்து ஒருவர் திடீரென வந்து மாணவியை காப்பாற்றுகிறார். அந்த இளைஞர் சிறுவனிடமிருந்து கத்தியை பறிக்க, அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக உதவியளித்து மாணவியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது காதல் தகராறால் ஏற்பட்டதாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிறுவன் மீது பாலியல் குற்றச்சாட்டு, போக்சோ சட்டம், ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சதாரா மாவட்ட எஸ்பி துஷார் தோஷி தெரிவித்தார். இந்த சம்பவம் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.