தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அந்த கட்சியினர் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை அவசர வழக்காக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
எமது தலைவர் #எழுச்சித்தமிழர் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார். இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை. இந்த சூழலில், #சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.
இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி,
நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா? என்று பதிவிட்டுள்ளார்.