இயற்கையில் அரிதாகக் காணப்படும் ஒரு காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வேர்க்கடலை, விதைகள், பழங்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்ளும் அணில்கள், சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக பெரிய உயிரினங்களையும் வேட்டையாடுவதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு அணில் பச்சோந்தியை கொடூரமாகக் கொன்று சாப்பிடும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 11 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு மரச் சுவரில் அமர்ந்திருந்த அணில், தன் இரையான பச்சோந்தியின் தலையை கடித்து, பின்னர் அதன் உடலை மெதுவாகத் தின்று விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

பொதுவாக பச்சோந்தி போன்ற பெரிய உயிரினங்களை வேட்டையாடுவது அணில்களிடம் அரிதானது. ஆனால் போதுமான உணவு இல்லாதபோது அவை இத்தகைய இரைகளை நாடுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் காட்சி எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த வீடியோவை “இது என்ன வகையான அணில்?” என்ற தலைப்பில் @gunsnrosesgirl3 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 2.6 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதுடன், 2,000க்கும் மேற்பட்டோர் இதனை விரும்பி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒருவரின் கருத்துப்படி, “அணில்கள் விதைகள், கொட்டைகள் சாப்பிடும் என்று நினைத்தேன். ஆனால் இவை சிறிய அரக்கர்களாக மாறிவிட்டன!” என்றார். மற்றொருவர், “இயற்கை மிகவும் எதிர்பாராதது. ஒரு சிறிய அணிலும் இத்தனை தைரியம் காட்டும் என நம்ப முடியவில்லை” எனக் குறிப்பிட்டார்.