வியட்நாமில் அவசர வேலை காரணமாகத் தனது கடையைப் பார்த்துக் கொள்ளும்படி பள்ளி மாணவிகளிடம் கூறிச் சென்ற தெருவோர வியாபாரிக்கு, அவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு தெருவோர உணவுக் கடை உரிமையாளர், தனக்கு ஏற்பட்ட ஒரு அவசர வேலை காரணமாக, தனது கடைக்கு வழக்கமாக வரும் இரண்டு பள்ளி மாணவிகளிடம் கடையைச் சிறிது நேரம் கவனித்துக் கொள்ளும்படி வேண்டியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் கடைக்குத் திரும்பியுள்ளார்.

 

அப்போது அவருக்குக் காத்திருந்தது பெரும் ஆச்சரியம்! அந்த வியாபாரி ஒரு நாள் முழுவதும் போராடி விற்க வேண்டிய அனைத்துப் பொருட்களையும், அந்த மாணவிகள் இருவரும் சேர்ந்து வெறும் ஒரு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்த்திருந்தனர். காலிப் பாத்திரங்களுடன் மாணவிகள் புன்னகையோடு நிற்பதைக் கண்ட அந்த வியாபாரி, என்ன சொல்வதென்றே தெரியாமல் மலைத்து நின்ற காட்சி காண்போரைச் சிரிக்க வைத்துள்ளது. இந்தச் சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் “பெண் சக்தி” (Women Power) என்ற ஹேஷ்டேக் உடன் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “இந்த மாணவிகளிடம் வியாபாரப் பொறுப்பை ஒப்படைத்தால், ஒரு வருடத்திற்கான இலக்கை ஒரே மாதத்தில் முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது” என்று கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். மேலும்  பள்ளி மாணவிகளின் இந்தத் திறமை மற்றும் உதவியுள்ளம் பலரது இதயங்களையும் வென்றுள்ளது.