தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்து விட்டார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு ஆளுநரை வெளியேறுமாறு கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  அவர் ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம் என்றார். அதோடு அச்சிடப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.  அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்து விட்டு சென்றார்.

இந்நிலையில் பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநரை அழைத்து வந்து அசிங்கப்படுத்தி விட்டனர் என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் உரை தொடங்கியவுடன் திமுகவின் கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டது கடும் கண்டனத்திற்குரியது. நிர்வாக திறமையின்மை, வாரிசு அரசியல், லஞ்சம் போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மறைப்பதற்காக ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு வெளிநடப்பு செய்ய வைத்து விட்டனர் என்றும் கூறினார். மேலும் திமுக அரசு ஆளுநரை அழைத்து வந்து அசிங்கப்படுத்தியது தான் ஜனநாயக மரபா என்றும் கேள்வி எழுப்பினார்.