நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதிக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதிக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருடப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஏஓ முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர் காவிரி கரையில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு மாட்டு வண்டிகளில் மணலை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர். அதோடு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.