துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 18000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.

இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் துருக்கி விரைந்துள்ளனர். அங்கு அவர்கள் நூர்தாகி பகுதியில் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியவர்களை இந்திய வீரர்கள் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஹடேய் நகரத்தில் இந்திய வீரர்கள் தற்காலிக மருத்துவமனையை அமைத்து காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளித்தும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தும் வருகின்றனர். இந்தப் பணிக்கு “ஆப்ரேஷன் தோஸ்த்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.