ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சில்லகூர் மண்டலத்தில் உள்ள தம்மிணபட்னம் கோதண்டராமசாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி (TDP) பிரமுகருமான சதீஷ் யாதவ், பெண் ஒருவருடன் ‘நாகினி’ நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கோயில் தலைவர் சதீஷ் யாதவ் மற்றும் துவ்வூரு வினய் ரெட்டி உள்ளிட்ட மூன்று முக்கிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில், மது போதையில் பெண் ஒருவருடன் இணைந்து இவர்கள் ஆபாசமான முறையில் ‘நாகினி’ நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கிருந்த மற்றொரு நபர் இதனைத் தனது அலைபேசியில் படம்பிடித்துள்ளார்.

புனிதமான கோயில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபட்டிருப்பது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தலைவர்களே இப்படி நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது” என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. “புனிதமான கோயில் பதவிகளில் இருப்பவர்கள் உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் இன்னும் பதவியில் நீடிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆந்திர அரசியலில் இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.