பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக ஒரு மருமகள் தனது வயோதிப மாமியாரை  தாக்கிய அதிர்ச்சி சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோத்தே கிராமத்தை சேர்ந்த குர்பஜன் கவுர், ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அதிகாரியின் மனைவி. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்த நிலையில், தற்போது தனது மகன் வீட்டில் தங்கியிருந்தார். குர்பஜன் கவுரின் மருமகளான ஹர்ஜீத் கவுர், கணவரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி தரக் கோரி, தொடர்ந்து மாமியாரிடம் தகராறு செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஹர்ஜீத் கவுர் தனது மாமியாரை தலைமுடியை இழுத்து, பலமுறை கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அவரது குழந்தை அந்த காட்சிகளை பார்த்து, “அம்மா, பாட்டியை அடிக்காதீர்கள்” என கெஞ்சியும், தாயாரின் கொடூரத்தை நிறுத்த முடியவில்லை. மாமியார் மீதான தாக்குதலை, சிறுவனே தனது செல்போனில் பதிவு செய்து, பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதனைப் பார்த்த ஆயிரக்கணக்கானோர், அதிர்ச்சி மற்றும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது. குர்தாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, சம்பந்தப்பட்ட போலீசார் இந்த விவகாரம் குறித்தும், தாக்குதல் நடந்த சூழ்நிலைகள் மற்றும் வீடியோ பதிவானது எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.