ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனியின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஒரு வாரத்திற்குள் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும், நாட்டின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தாங்கள் யாரையும் முதலில் தாக்கப்போவதில்லை என்றும், ஆனால் நியாயமற்ற தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு சக்திகளால் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை அண்டை நாடுகள் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், தற்போதைய புவிசார் அரசியல் சூழலைத் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையே மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பிணைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கலாச்சாரம், தத்துவம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களும் இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வர்த்தகம் மற்றும் எண்ணெய் இறக்குமதி தொடர்பான சவால்களுக்கு மத்தியிலும் இந்த நட்பு உறுதியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரானின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும், அண்டை நாடுகள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
