ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் வானவேடிக்கை காட்டினார். அவர் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் குவித்து அசத்தினார். நிகோலஸ் பூரன் (38) மற்றும் ரிஷப் பண்ட் (32*) ஆகியோரின் பங்களிப்பால் லக்னோ 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் (DLS) முறைப்படி ஆர்சிபி அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு முகமது ஷமி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார். இளம் வீரர் பிரின்ஸ் யாதவ், நட்சத்திர வீரர் விராட் கோலியை கிளீன் போல்டாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ரஜத் படிதார் (61), டிம் டேவிட் (40) போராடிய போதிலும், ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

போட்டியின் போது ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா வீசிய பந்தில் லக்னோவின் பூரன் அவுட்டாகாமல் தப்பித்தபோது இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்த பிறகு, பூரன் தனது விரலை நீட்டி எச்சரிப்பது போல குருணால் பாண்டியாவை நோக்கிச் சென்றார். ஒருகட்டத்தில் குருணாலின் காலரைப் பிடித்து பூரன் தள்ளியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், பதற்றத்துடன் இருவரையும் விலக்க ஓடி வந்தார்.

ஆனால், அருகில் சென்றபோதுதான் இருவரும் வேடிக்கையாக விளையாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக இருவரும் லக்னோ அணியில் ஒன்றாக விளையாடிய நண்பர்கள் என்பதால், விளையாட்டாகச் செய்த இந்தச் செயலால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் பயிற்சியாளர் லாங்கர் உட்பட அனைவரும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.