கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும் கிராமத்தில் இருப்பவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பனின் தாய் மன வளர்ச்சி குன்றியவராக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக ஐயப்பன் தான் அனைத்து வேலைகளையும் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஐயப்பனின் செல்போனை வாங்கி பேசிய மற்றொரு நபர், அருணாச்சலம் என்பவரின் மகன் ஆகாஷிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இவ்விஷயம் ஐயப்பனுக்கு தெரியாத நிலையில், செல்போனில் ஆபாசமாக பேசியது இவர் தான் என ஆகாஷ் நினைத்துக்கொண்டு முன்விரோதத்தை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆகாஷ் நேற்று மாலை ஐயப்பனை தன் இருசக்கர வாகனத்தில் தொண்டனந்தல் வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஐயப்பனின் கை, கால்களை கட்டி விட்டு நீதானே என்னை போனில் ஆபாசமாக திட்டியது என கஞ்சா போதையில் சுமார் 3  மணி நேரமாக அங்கு கிடைத்த முட்களாலும், தடியினாலும் கொடூரமாக தாக்கியுள்ளார் ஆகாஷ்.

இதுகுறித்து அறிந்த கிராம இளைஞர்கள், காயமடைந்த ஐயப்பனை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஐயப்பனை தாக்கிய நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.