தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் அகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடித்து வரும் திகோட் திரைப்படத்தில் விஜயகாந்தின் தோற்றம் இடம் பெறுவது தொடர்பாக என்னிடம் பலமுறை வீட்டிற்கு வந்து அனுமதி கேட்டார். அதாவது ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டுவர இருக்கிறோம் என்றும் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்றும் அவர் கேட்டார்.

நடிகர் விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். இந்த சமயத்தில் நான் விஜயகாந்த் இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும். செந்தூரப்பாண்டி படத்தில் நடிகர் விஜய்யை அறிமுகப்படுத்தியது விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எனவே என்னால் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. விஜய் வந்து என்னை சந்திக்கும் போது நான் நல்ல முடிவாக கூறுவேன் என்று ‌ அவர் கூறினார். மேலும் இதன் மூலம் தி கோட் படத்தில் விஜயகாந்தின் கௌரவத் தோற்றம் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.