சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது. இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். அதேபோல் காவல் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் நைட் விஷன் திறனுடன் இருக்க வேண்டும்.

அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். காவல் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, மரணம் மற்றும் சித்திரவதை போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும் சமயத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டு பெற வேண்டும். அதேபோல் என்.ஐ.ஏ, சிபிஐ அமலாக்கத்துறை, தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண் பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு போன்ற விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி 6 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர் கபாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணையில் வந்தது. அப்போது 25 மாநில யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த்தா தவே கூறியுள்ளார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு உத்தரவிடுகிறோம். இதனை பின்பற்றாமல் இருக்கும் பட்சத்தில் மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில உள்துறை செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அதில் கூறப்பட்டுள்ளது.