ஐபிஎல் 39-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் லக்னா அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களம் இறங்கினார். இதில் ரகானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து களம் இறங்கிய மிட்செல் 11 ரன்னிலும், ஜடேஜா 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.

இதனையடுத்து ருதுராஜ்-துபே ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ருதுராஜ் 108 ரன்கள் எடுத்து சதம் விளாசிய நிலையில், துபே 66 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் லக்னோ அணி இறுதியில் 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.