சமூக ஊடகங்களில் புலிகள் வேட்டையாடும் காட்சிகள், உறுமும் வீடியோக்கள் பழமையாகிவிட்டன. ஆனால் தற்போது, ஒரு வெள்ளை புலி குறட்டை விடும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @beyond_the_wildlife எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு வெள்ளை புலி ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை விடும் காட்சி பதிவாகியுள்ளது. அதில், புலி மனிதனைப் போலவே சத்தமாக குறட்டை விடுவதை காண முடிகிறது. இது “Tiger Snoring Video” என்ற பெயரில் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்து, “புலிகளும் குறட்டை விடுவார்களா?” என்ற கேள்வி நெட்டிசன்களின் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வீடியோவுடன், “புலிகள் தாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்போது, ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை விடுவது இயல்பான நிகழ்வாகும். காற்று மூக்கு மற்றும் தொண்டை வழியாக செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட்டு குறட்டை உருவாக்குகின்றன” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

புலி பராமரிப்பாளர்களும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களும் இது ஒரு நேர்மறையான அறிகுறி எனக் கூறுகிறார்கள். குறட்டை விடும் புலி, தனது சூழலில் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருப்பதை இது காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ 5 லட்சம் முறை காணப்பட்டு, 54,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலர் இதில் வேடிக்கையான மற்றும் உணர்வுப்பூர்வமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். “அவர் என் அப்பா போலவே குறட்டை விடுகிறார்!” என்று ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். “கொடூரமான வெள்ளை புலி  குறட்டை விடுவது மிகவும் அழகாக இருக்கிறது” என மற்றொருவர் எழுதியுள்ளார்.

மேலும் “இது அதன் இயற்கையான வன வாழ்விடத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன் இனத்தை நாமே அழித்துவிட்டோம்” என சமூகப் பொறுப்புணர்வுடன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.