தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்  தலைமை தாங்கியுள்ளார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.966.62 கோடி செலவில் பொழுதுபோக்கு பூங்கா, பஸ் நிலையம், குடிநீர் வினியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், புதிய பஸ்நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும்  விரைவாக மற்றும் தரமாக முடிக்க வேண்டும். இவ்வாறு   சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.