சேலம் மாவட்டத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற கார் சர்வீஸ் ரோட்டில் திரும்ப முற்பட்டது. இதனால் சொகுசு பேருந்து டிரைவர் சடன் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. அந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் மீதும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கொத்தனாரான பொன்னுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னுசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.