ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அஜ்மீர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக நேற்று முன்தினம் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளத்தில் வழிபாடு செய்ய சென்ற ஒருவர் திடீரென சிக்கிக் கொண்டார். அவர் மத வழிபாட்டுத்தலம் அருகே நின்றபோது திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து டீக்கடைக்காரர் ஒருவர் சாதுரியமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் டீக்கடைக்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ராஜஸ்தானில் இன்னும் சில தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.