தெலுங்கானாவில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் திடீர் சோதனைகளும், அமைச்சர்களின் அதிரடி நடவடிக்கைகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. மக்களுக்கான அரசு சேவைகள் எந்தளவுக்குச் சென்று சேர்கின்றன என்பதை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் ஒருவர், அங்குள்ள அவலத்தைக் கண்டு தானே களத்தில் இறங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல்  மாவட்டம், பெந்த்லவெல்லி மண்டலத்தில் உள்ள வட்டாட்சியர்அலுவலகத்திற்கு அம்மாநில அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் திடீரென்று ஆய்வுக்குச் சென்றார். அலுவலகத்தின் கோப்புகள் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த மனுக்களின் நிலவரங்களை அவர் ஆய்வு செய்தபோது, அங்கு பல கோப்புகள் தேங்கிக் கிடப்பதைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

ஆய்வின் ஒரு பகுதியாக அலுவலகத்தின் கழிவறையைப் பார்வையிட்ட அமைச்சருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும், பயன்படுத்த முடியாத மோசமான நிலையிலும் இருந்தன. பொதுமக்களும் ஊழியர்களும் பயன்படுத்தும் இடமே இப்படி அசிங்கமாக இருப்பதைக்கண்டு கொதித்தெழுந்த அமைச்சர், அதிகாரிகளை கடுமையாகக் கண்டித்தார்.

 

அதிகாரிகளை எச்சரித்ததோடு நிறுத்தாமல், தானே முன்வந்து அந்த அசுத்தமான கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். அமைச்சரே தன் கைகளால் கழிவறையைச் சுத்தப்படுத்திய இந்தச் சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளையும் ஊழியர்களையும் உறைந்துபோகச் செய்தது.

அலுவலக வளாகத்தில் தூய்மையைப் பேணத் தவறிய ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்தார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்குச் சரியான வசதிகளைச் செய்து தருவதுடன், அலுவலகங்களைச் சுத்தமாகப் பராமரிப்பது அதிகாரிகளின் அடிப்படைக் கடமை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.