
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(36). இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையுடன் கணேசன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தினமும் குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு அட்டூழியம் செய்துள்ளார். இதனைப் பார்த்த கணேசனின் தந்தை கிருஷ்ணன் தனது மகனுக்கு அடிக்கடி அறிவுரை கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன் வீட்டில் இருக்கும் அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தூங்கினார். மகனின் காலை உடைத்து அவரை திருத்தலாம் என நினைத்த கிருஷ்ணன் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு கணேசன் அருகே வந்தார்.
அவர் போர்வையை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்ததால் எது கால் எது தலை என தெரியாமல் கிருஷ்ணன் இரும்பு கம்பியால் கணேசனின் தலையில் ஓங்கி அடித்து விட்டார். ரத்தம் அதிகமாக வந்த பிறகுதான் தலையில் அடித்ததை உணர்ந்து கிருஷ்ணன் பரிதவித்து நின்றார்.
அதற்குள் ரத்தம் அதிகமாக வெளியேறி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணனை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.