அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் காட்டப்படும் மர்மமான மாளிகை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உண்மையில் அது பேய் பங்களா கிடையாது; ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான ‘சோமு பேலஸ்’ என்ற சொகுசு ஹோட்டல் ஆகும். 16-ஆம் நூற்றாண்டில் ராணுவக் கோட்டையாகக் கட்டப்பட்ட இந்த அரண்மனை, தற்போது இப்படத்தின் முக்கிய படப்பிடிப்புத் தளமாக மாறியுள்ளது.

திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இதில் வாமிகா கபி, தபு, பரேஷ் ராவல் மற்றும் ராஜ்பால் யாதவ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தில் பல கற்பனையான காட்சிகளும் சுவாரஸ்யமான மர்மங்களும் நிறைந்திருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படத்தில் வரும் அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் 5 மீட்டர் தடிமன் கொண்ட சுவர்களும் அதன் பழமையான வடிவமைப்பும் கதைக்கு ஒரு மிரட்டலான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.