ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா – ஜிம்பாப்பே இடையேயான டி20 போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது சூறாவளி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளார். சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான மற்றும் சற்று மெதுவான ஆடுகளத்தில் விளையாடிய இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், தனது டி20 சர்வதேச கரியரின் மிகச்சிறந்த ஸ்கோராக வெறும் 49 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து மிரட்டினார்.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்த போதிலும், சற்றும் பதற்றமின்றி அணியின் பொறுப்பைத் தன் தோள் மீது சுமந்த வைபவ், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் இணைந்து அருமையான கூட்டாண்மைகளை உருவாக்கினார். வெறும் 31 பந்துகளிலேயே தனது அரைசதத்தைக் கடந்த அவர், தனது வழக்கமான அதிரடி பாணியுடன் சேர்த்து ஆடுகளத்தின் தன்மைகேற்ப நேர்த்தியான ஷாட்டுகளையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

 

இன்றைய போட்டியில் சதமடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, பவுண்டரி எல்லையில் பிராட் எவான்ஸ் எடுத்த ஒரு அதிர்ச்சியூட்டும் கேட்ச் காரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 81 ரன்களுடன் பெவிலியன் திரும்பியபோது, ஹராரே மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 

சதத்தை நூலிழையில் தவறவிட்ட போதிலும், இந்த இன்னிங்ஸின் மூலமாகவும் வைபவ் பல சாதனைகளைத் தன்வசமாக்கியுள்ளார். தனது 16-வது பிறந்தநாளை எட்டுவதற்கு முன்பே டி20 சர்வதேசப் போட்டிகளில் இரண்டு அரைசதங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், நேபாளத்தின் குஷல் புர்தேலின் சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து தொடரின் தொடக்கத்தில் சில தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், தற்போது ஜிம்பாப்பே தொடரில் தனது அசாத்திய திறமையால் மீண்டுவந்து கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வைபவ் சூர்யவன்ஷி தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மேலும் இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 192 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தற்போது ஜிம்பாவே அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.