உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, இந்த அதிசயத்தை நேரில் பார்க்க அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். ஃப்ரிட்ஜில் உறைந்திருக்கும் அந்த பனிக்கட்டியை கடவுளின் அற்புத அடையாளமாக கருதி, மக்கள் அதன் முன்பு கைகளைக் கூப்பி பக்திப் பெருக்குடன் மலர்களைத் தூவி, ஆரத்தி காட்டி வழிபடவும் தொடங்கியுள்ளனர். இந்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் இதனை ஆன்மீக நம்பிக்கையோடும், ஒரு தெய்வீக அற்புதமாகவும் பார்த்து பக்தி பரவசமடைந்து வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ அறிவியல் கண்ணோட்டத்தோடு, இது ஃப்ரிட்ஜில் தண்ணீர் உறைந்து இயற்கையாகவே நிகழ்ந்த ஒரு தற்செயலான நிகழ்வு  என்று கூறி வருகின்றனர். இந்த பனிக்கட்டி வடிவம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அல்லது அறிவியல் பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. எது எப்படியோ, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விசித்திரமான காட்சிகள், மக்களின் கவனத்தை ஈர்த்து எவ்வளவு பெரிய விவாதமாக மாறுகிறது என்பதற்கு இந்த ஆக்ரா சம்பவமே ஒரு சிறந்த உதாரணம்.