பூனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் 20 வயது சியா கோயலின் குடும்பத்திற்கு அடுத்தடுத்துப் பலத்த நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 18 அன்று புனேயின் லோஹகாட் கோட்டையில் டிரெக்கிங் சென்றபோது, சியா கோயலும் அவரது காதலர் சேத்தன் சவுத்ரியும் இணைந்து கேதனை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“>

இந்த பரபரப்பான கொலை வழக்கின் பின்னணியில், சியாவின் குடும்பத்தினர் நடத்தி வரும் ‘எம்/எஸ் பிஜி கோயல் அண்ட் கம்பெனி’ என்ற மசாலா மற்றும் உலர் பழங்கள் விற்கும் கடைக்கு, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிரடியாக வணிகத்தை நிறுத்தும்படி மூடல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டாய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, எஃப்டிஏ அதிகாரிகள் இக்கடையில் தீவிர சோதனை நடத்தினர். இந்த ஆய்வின்போது, மஞ்சள் தூள், எள் மற்றும் சோயா துண்டுகள் உள்ளிட்ட நான்கு உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், லேபிளிங் விதிமுறைகளை மீறியது மற்றும் கலப்படச் சந்தேகம் காரணமாக, சுமார் 8.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,172 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உணவு உரிமத்தில் உள்ள விவரங்களைச் சரியாகப் புதுப்பிக்கத் தவறியதால், மறு உத்தரவு வரும் வரை வணிக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் நடவடிக்கையை அடுத்து, சியாவின் தந்தை பிரவீன் கோயல் செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டுப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “என் மகள் இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவளுக்குச் சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதற்கு நான் முழுமையாக ஒத்துழைக்கிறேன்; ஆனால், என் மகளின் செயலுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் குறிவைத்துத் தாக்குவது மற்றும் அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, என் மகளின் தவறுக்காக எங்களைத் தண்டிப்பது போல இது உள்ளது.

எங்கள் கடை சீல் வைக்கப்படவில்லை, கடையின் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளதால், 8 முதல் 10 நாட்கள் வரை தற்காலிகமாக மூடியுள்ளோம்” என்றும், தன் குடும்பத்தினர் மீதான தேவையற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.