கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுத்துறை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபேஸ்(32) என்ற மகன் இருக்கிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதில் பூபேஸ் திருக்காட்டுத்துறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். காயத்ரி தனியார் பள்ளியில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மிதுன்(3) என்ற குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் மது குடித்துவிட்டு பூபேஸ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் பெற்றோரிடம் தங்க நகை வாங்கி வருமாறு கூறி தொந்தரவு செய்தார். இதனால் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காயத்ரி தனது பெற்றோரிடம் இருந்து 4 1/2 பவுன் தங்க சங்கிலியை வாங்கி வந்து கொடுத்தார். நேற்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூபேஸ் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.