சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முத்தூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோமதியை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று கோமதியின் உடல்நிலை மேலும் மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த கோமதியின் உறவினர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் கோமதி இறந்ததாக குற்றம் சாட்டி எடப்பாடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.