இந்தியா 3வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் நாள் இதோ வந்துவிட்டது. ஆம், 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா 3வது முறை உலக கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய திரைகள் வைத்து போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத் மைதானத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 2003 இல் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பழி தீர்க்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

இந்த போட்டியைக் காண பிரதமர் மோடி, அமித்ஷா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மைதானத்திற்கு வருகை தர உள்ளனர். இதற்கிடையே இந்தியா உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கமான் இந்தியா! மேக் இட் த்ரீ என பதிவிட்டுள்ளார்.. அதாவது இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்றும், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்ற நிலையில், அதை மூன்றாக மாற்ற வேண்டும் என ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.