சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் நாட்களில் சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் சென்னை உட்பட 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் சென்னை சேப்பாக்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல நாளை  நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் உணவு, குடிநீர் பாட்டில் எடுத்து வர அனுமதி இல்லை.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண செல்லும் முன்னர் 2 கட்ட சோதனைகளுக்கு பின்னரே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிரிக்கெட் போட்டியில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 300 பேர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்..

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 8, 13, 18, 23 ,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.