
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் 6 வயது சிறுமி ஜோஷ்லின் மாயமான வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிமன்றம் கொடூரக் குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சடங்குகளுக்காக தனது மகளை ஒரு பேயோட்டும் நபருக்கு ரூ.96,000க்கு விற்றதாக வெளிவந்த தகவல், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சிறுமியின் தாய் ராகுவேல் ‘கெல்லி’ ஸ்மித், அவரது காதலன் ஜாகுவான் அப்பொலிஸ் மற்றும் நண்பர் ஸ்டீவானோ வான் ரின் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், கூடுதலாக 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோஷ்லின் கடந்த பிப்ரவரி 2024ல் காணாமல் போன செய்தி முதலில் வருத்தத்தையும், அவரது தாயார் ஊடகங்களில் கதறி அழுதபடி வெளிப்படுத்திய துயரமும் நாட்டின் இருதயங்களை குலையச் செய்தது. ஆனால், பின்னர் நடந்த விசாரணையில் அதே தாயார் தனது மகளை ஒரு “சங்கோமா” எனப்படும் சூனியக்காரரிடம் விற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சாட்சிகளில், அந்த சூனிய நபர் சிறுமியின் கண்கள் மற்றும் தோலை சடங்குக்கு பயன்படுத்த கேட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த கொடூர செயல் பின்னணியில் மூவரும் போதைப்பழக்கத்திற்கு பணம் தேவைப்பட்டதால்தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகக் குறைந்த தொகைக்காக ஒரு குழந்தையின் உயிரை பலியாக்கிய இந்த மூவரும், தங்கள் செயல்களுக்கு எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை என்பதும் நீதிபதியின் தீர்ப்பின் போது வெளிவந்த சோகமான உண்மை. தீர்ப்பளிக்கப்படும் தருணத்தில், நீதிமன்ற அறையில் கைதட்டல்களுடன் ஜனங்கள் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
தற்போது வரை, சிறுமி ஜோஷ்லினின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே மிகுந்த வேதனையானது. நாடு முழுவதும் தேடுதல் நடந்தும் எந்த தடயமும் இல்லை. தற்போது, தென்னாப்பிரிக்காவின் எல்லைகளைத் தாண்டியும், புலனாய்வு அதிகாரிகள் தேடலை விரிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், ஜோஷ்லினின் பாட்டி தனது பேத்தியின் படம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் நீதிமன்றத்தில் தோன்றி, குடும்பத்தின் துக்கத்தையும், நீதிக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.