
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஓட்டியிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டு யானை இரு சக்கர வாகனத்தை வழிமறித்தது. யானையை பார்த்ததும் வாகன ஓட்டி தப்பி சென்றார். ஆனால் ஒற்றை யானை விடாமல் துரத்தி சென்று மம்தாவை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று மம்தாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.