உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் கணவன் ஒருவரே தனது மனைவிக்கு அவரது காதலனுடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த தஞ்சய் பிரஜாபதி என்பவருக்கும் ஜலால்பூரைச் சேர்ந்த பம்மி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 

இந்நிலையில் மும்பையில் பணியாற்றி வந்த தஞ்சய் தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்தபோது பம்மிக்கும் அவரது ஊருக்கு அருகில் வசிக்கும் ராஜு என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தஞ்சய் அலுவலகம் சென்ற நேரத்தில் பம்மி தனது காதலனுடன் வெளியேறியதுடன் அவருடனேயே வாழ விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவியை சமாதானப்படுத்த முயன்ற தஞ்சய் அவரது பிடிவாதத்தை அடுத்து ஜான்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு கோயிலில் இருவருக்கும் சட்டப்பூர்வமாகவும் சடங்குகள் படியும் திருமணம் செய்து வைத்தார். தனது மகனை தானே வளர்க்கப் போவதாகக் கூறிய தஞ்சய் மோதல்களைத் தவிர்த்து அமைதியான வாழ்வைத் தேடி இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டு மணமக்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.