தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற பொழுது… தேர்தல் அறிக்கை கொடுத்த போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்று தான் மக்கள் புரிந்து கொண்டார்கள், நாங்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லிருக்கிறார்கள். ஏற்கனவே அரசு இருக்குற நிபந்தனை அடிப்படையிலே 60 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். அரசு ஆய்வு செய்து, தரவுகள் அடிப்படையில் … நிபந்தனை அடிப்படையில அரசுதான் 59 லட்சத்தை தள்ளுபடி செஞ்சிருக்காங்க. அதுல இப்போ மேல் முறையீடு செய்ய சொல்லிருக்காங்க. மீண்டும் மேல் முறையீடு செய்ய முன் வருகிற மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றார்கள். ஆகவே நிபந்தனைகளை தளர்த்துங்கள்.
மீண்டும் விண்ணப்பம் செய்யணும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சர் சொல்லிருக்காங்க… பல இடத்துல சர்வர் வேலை செய்யாததால அந்த மக்கள் எங்க போயி விண்ணப்பம் செய்யணும்ன்னு முழிக்குறாங்க. இப்போ மாண்புமிகு முதலமைச்சர் கூட பண்ணை வீட்டுல இருந்து வருகிற பொழுது 2 பொது மக்கள் வந்து கொடுத்தாங்க. அவர் உடனே அதை பரிசீலனை பண்ணுறேன்னு சொன்னாங்க. இதே மாதிரி தமிழ்நாட்டுல 2 கோடியே 60 லட்சம் பேரும் முதலமைச்சரை சந்தித்து கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்க அமைச்சரா இருந்தவங்க. அதுவும் வருவாய் துறை அமைச்சரா இருந்தவங்க. அலைக்கழிக்குறாங்க என்ற வார்த்தை எல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கிடுறேன். நீங்க அரசின் கவனத்தை ஈர்த்து அமருங்க என தெரிவித்தார்.
உடனே பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், எதிர்கட்சியா இருக்க கூடியவர்கள் குறை சொல்ல கூடியவர்கள். குறையை கலையக்கூடியவர்கள் ஆளுங்கட்சி. அதுனால குறைய சொல்லணும்ன்னு சொல்லக்கூடாது. குறைகளை ஆதாரத்தோடு சொல்லுங்க. நீங்களே சொல்லுறீங்க…. மேல்முறையீடு செய்பவர்கள் அலைக்கழிக்கபடுறாங்கன்னு சொல்லுறீங்க… எங்கே ? எப்போ ? எந்த இடத்துல? எந்த வட்டத்துல ? யாரு அலைக்கழிக்கப்படுறா ? அதை நீங்க குடுங்க. அதற்கு உடனடியா நடவடிக்கை எடுக்கலைனா… திருப்பி கேளுங்க என தெரிவித்த்தார்.