
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் 5 முதல் 7ம் வகுப்பு வரை கிட்டத்தட்ட 40 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ‘டேர் கேம்’ என்ற பெயரில் ஒரு விளையாட்டை விளையாடினர். அது என்னவென்றால் பென்சில் ஷார்ப்னரில் உள்ள பிளேடு மூலம் தாங்களே தங்களது கையில் காயம் ஏற்படுத்த வேண்டும், அதனை செய்ய முடியாதவர்கள் ரூ. 10 அபராதமாக செலுத்த வேண்டும் என்று மாணவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து ஒரு சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று தகவல் கொடுத்தபோது இந்த டேர் கேம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் சில பெற்றோர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதனால் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தில் எந்த ஒரு குற்ற நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையின் போது குற்றச் செயலின் சாட்சி கிடைத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.