2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதமர் மோடி ஜார்கிராம் பகுதியில் மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு சாலையோரத்தில் இருந்த ஒரு சிறிய கடையில் இறங்கி, மோடி ஜால்முரி சாப்பிட்டதுடன், அந்த வியாபாரியிடம் சுமார் 10 நிமிடங்கள் சகஜமாகப் பேசினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தக் கடை ‘வைரல்’ ஆகி, நள்ளிரவிலும் மக்கள் ஜால்முரி சாப்பிட நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர். ஆனால், தற்போது அந்த வியாபாரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் தான் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

 

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்த நபர், ஒரு இடத்தில் தனது பெயர் தீபக் குமார் என்றும், மற்றொரு இடத்தில் விக்ரம் ஷா என்றும் மாற்றி மாற்றித் தெரிவித்துள்ளார். இரண்டு பேட்டிகளிலும், தான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், பீகாரைச் சேர்ந்தவர் என்றும் ஒரே மாதிரியான தகவல்களைக் கூறிய அவர், பெயரை மட்டும் மாற்றியது ஏன் எனக் குழப்பம் எழுந்துள்ளது.

பாஜக வெளியிட்ட வீடியோவில் விக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதமர் கட்டாயப்படுத்தி காசு கொடுத்தது, நலம் விசாரித்தது என நெகிழ்ச்சியான தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும், “ஒரே ஆளுக்கு ஏன் ரெண்டு பேரு?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது ஊடகங்களின் குளறுபடியா அல்லது அந்த நபரே திட்டமிட்டுச் செய்தாரா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.