பீகாரில் ஓடும் ரயில் ஒன்றில், ஒரு ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE), நிஹங் சீக்கியர் ஒருவரிடம் பயணச் சீட்டைக் (டிக்கெட்) கேட்டபோது, அந்தச் சீக்கியர் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த நிஹங் சீக்கியர், “நாங்கள் நிஹங் சீக்கியர்கள், எங்களுக்குப் பயணிக்கத் டிக்கெட் தேவையில்லை, இலவசமாகவே பயணம் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

டிக்கெட் பரிசோதகர் அவரிடம், “உங்களுக்கு இருக்கை இருக்கிறதா?” என்று கேட்டதற்கு, அந்தச் சீக்கியர், “எங்களுக்கு இருக்கை எதுவும் கிடையாது” என்று பதிலளித்துள்ளார்.

“எங்களிடம் நிஹங் லைசென்ஸ் உள்ளது” என்று கூறி, தங்களுக்கு டிக்கெட் விலக்கு அளிக்கப்படுவதாக அவர் வாதிட்டார். இருப்பினும், இந்திய ரயில்வே விதிகளின்படி, நிஹங் சீக்கியர் உட்பட எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் டிக்கெட் இல்லாமல் இலவசமாகப் பயணம் செய்யச் சலுகை இல்லை.

மாணவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ சலுகை இருந்தாலும், அவர்களும் முறையான டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே விதிகள் தெளிவுபடுத்துகின்றன.