தமிழில் யாருடா மகேஷ், மாகரம், மாயவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய சந்தீப் கிஷன் நடிப்பில் புதியதாக மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்,.2 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். புது படங்களை தியேட்டர்களில் வெளியான பின் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடவேண்டும் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

எனினும் மைக்கேல் திரைப்படத்தை 3 வாரத்திலேயே ஓடிடி-யில் வெளியிட்டு விட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தியேட்டர்களில் மைக்கேல் படத்தை திரையிட தடைவிதிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது, “மைக்கேல் படத்தை 3 வாரத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியிட்டதால் மற்ற தயாரிப்பாளர்களும் அது மாதிரி செய்வார்களோ எனும் அச்சம் வருகிறது. இது சம்பந்தமாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடத்தி மைக்கேல் திரைப்படத்தின் தயாரிப்பாளர், பட நிறுவனம், இயக்குனர் போன்றோருக்கு வரும் காலங்களில் ஒத்துழைப்பு அளிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி ஆலோசித்து முடிவுசெய்யப்படும்” என்று கூறினார்.